பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்திய சோதனையில் 106 பேரும், நேற்று நடத்திய சோதனையில் 250 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகள் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், கோவை உள்ளிட்ட அலுவலகத்திற்கு வெளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிஎஃப்ஐ அலுவலகத்திற்குள் செல்ல இன்று காலைமுதல் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.