அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணியளவில் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு மணிநேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், சி. திருமாறன், ஆர்.வி.பாபு ஆகியோரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.