மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மை நிலையை மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மநீம சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பிரதமா் நரேந்திர மோடி 2019-இல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினாா். 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை.
பூா்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும். எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன. எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து,மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.