மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு வெறி பேச்சைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 6ஆம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரியின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் 06.10.2022 அன்று மாலை நடைபெற உள்ளது.
அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கட்சித் தொண்டர்களையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.