தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தினுடைய பல பகுதிகளில் திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்படுவது போல் தோன்றுகிறது. உள்நோக்கத்தோடு சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுகின்ற நிகழ்வுகள் நடப்பதை பார்க்கின்றோம். தமிழகத்தில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை நிலவுவது போல ஒரு மாயையை உண்டாக்குகின்ற முயற்சிகளாக இவை பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க- கடைசி சர்வதேச ஆட்டம்: ஜுலான் கோஸ்வாமிக்கு அளிக்கப்பட்ட கெளரவம்
தமிழக காவல் துறை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல்கள் போல பல பகுதிகளிலும் தொடர் வன்முறைகளாக உருவாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இப்போது நடப்பவை ஆரம்பமாக இருந்தாலும் நடத்துபவர்களுடைய எதிர்கால திட்டம் சந்தேகத்திற்குரியதாக இருக்கின்றது.
பல வட மாநிலங்களில் இதைப் போன்ற சிறு சிறு சலசலப்புகள் தான் மாநில தழுவிய கலவரங்களாக மாறி கட்டுப்படுத்தப்பட முடியாத மத கலவரங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தன. அதன் மூலம் அரசியல் லாபங்கள் அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு நடந்ததையும் நாம் அறிவோம்.
கலவரங்கள் உருவாக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தாம் சர்வாதிகாரியாக மாறுவதற்கு தயங்க மாட்டேன் என்று முதல்வர் குறிப்பிட்டு பேசியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்க நினைக்கின்ற சில கட்சிகளுடைய முயற்சிகள் உடனடியாக இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.