திருச்சி: அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிறைகளில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இதனையொட்டி சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நிகழாண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி இன்று திருச்சி சிறைகளிலிருந்து மொத்தம் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ஆண் கைதிகள் ராஜா, சுந்தர்ராஜன், சாமிநாதன், ராமதாஸ், சின்னத்தம்பி, நாகேந்திரன், ரமேஷ், நாகராஜ், சுதாகர், ரஞ்சித்குமார், பச்சையப்பன், சாமிதுரை ஆகிய 12 பேரும் திருச்சி மகளிர் சிறையில் இருந்து 2 பேரும் என 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து 4 பேர் சேர்த்து திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறைக் கைதிகள் யாரும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படாத நிலையில் இந்தாண்டு திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அண்ணா பிறந்தநாள்: 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை