காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டம் சங்கரம்பாடி சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் பெற்றோர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தைகள் இருவரையும் கவலைக்கிடமான நிலையில் காப்பாற்ற வழியில்லாமல் உறவினர்கள் திண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரியப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயபாபு(41). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் விநியோகம் செய்து வருகிறார். இவருடன் இவரது மனைவி வி.அனிதா(35) மற்றும் இவர்களது குழந்தைகள் முகேஷ்(12), செபியா(10) நால்வரும் சேர்ந்து ஒரு இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான ஆரியப்பெரும்பாக்கத்திலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சங்கரம்பாடி சத்திரம் அருகே சென்ற போது, எதிரில் வந்த கண்டெய்னர் லாரி மோதியது. கடந்த செப்.8 வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சாலை விபத்தில் விஜயபாபு சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி உயிரிழந்தார். இவரது மனைவி அனிதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு பின்னர் செலவழிக்க போதுமான பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது கடந்த செப்.13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலமானார்.
பெற்றோர்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்த நிலையில், இவர்களது குழந்தைகளான முகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், செபியா சென்னையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவருமே கவலைக்கிடமான நிலையில் இருந்து வருவதாகவும், தமிழக முதல்வரோ அல்லது சுகாதாரத்துறை அமைச்சரோ சிறப்புக் கவனம் செலுத்தி பெற்றோரை இழந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விஜயபாபுவின் தந்தை ராஜேந்திரன் கூறுகையில், நான் எனது மகனையும், மருமகளையும் ஒரே நேரத்தில் விபத்தில் பறி கொடுத்து விட்டேன். எனது பேரப்பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்று என் மனம் பதறுகிறது.
நானும் என் மனைவியும் சொல்ல முடியாத மன வேதனையில் இருக்கிறோம். கையில் செலவழிக்க பணமும் இல்லை, எப்படியாவது எங்கள் பேரக்குழந்தைகளை தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர் பெருமக்களோ தனிக்கவனம் செலுத்தி காப்பாற்றினால் மட்டுமே குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
படவிளக்கம்}1}விபத்தில் உயிரிழந்த தம்பதியர் விஜயபாபு,அனிதா(2)செபியா(3)முகேஷ்(4)லாரி மோதியதில் விபத்தில் சிக்கிய தம்பதியர் மற்றும் குழந்தைகள்