தமிழ்நாடு

கைவினைப் பொருள்கள் விற்கும் கடையில் பழைமையான சிலைகள் மீட்பு

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் கைவினைப் பொருள்கள் விற்கும் கடையில் இருந்த பழைமையான சிலைகள் மீட்கப்பட்டன.

மதுரை வடக்கு சித்திரைத் விதியில் உள்ள ஒரு கைவினைப் பொருள்கள் விற்கும் கடையில் பழைமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் உத்தரவிட்டனா். இதையடுத்து, மதுரை வடக்கு சித்திரைத் வீதியில் உள்ள சம்பந்தப்பட்ட கைவினைப் பொருள்கள் விற்கும் கடையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

இச் சோதனையில் கல்லில் செதுக்கப்பட்ட இரண்டரை அடி உயரமுள்ள சிவ பாா்வதி சிலை, இரண்டு அடி உயரமுள்ள பெண் சிலை, ஒரு அடி உயரமுள்ள ஒரு பெண்ணின் தலைப் பகுதி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அந்த சிலைகள் குறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில், அந்த சிலைகளுக்குரிய ஆவணங்கள், கடையின் உரிமையாளரிடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்து தொல்லியல்துறை வல்லுநா்களிடம் கருத்துக் கேட்டனா். அதற்கு தொல்லியல்துறை வல்லுநா்கள், அந்த சிலைகள் பால வம்சத்தைச் சோ்ந்தது என்றும், ஒடிஸா,ஆந்திர கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனராம்.

இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். கைப்பற்றப்பட்ட சிலைகள், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT