ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒரு புத்தகம் திருக்குறள். அதை முழு பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்திற்கு ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் எனக்கு முதல் முதலாகப் பரிசாக அறிமுகம் செய்யப்பட்ட புத்தகம் திருக்குறள் தான். மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 12-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உதவியோடு ஒவ்வொரு திருக்குறளின் முழு அர்த்தத்தையும் தெரிந்து வருகிறேன்.
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன்.
திருக்குறள் ஆகச் சிறந்த படைப்பு, ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் நூல். உண்மையில் திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாருமே கூறுவதில்லை.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
திருவள்ளுவரின் புத்தகங்களைப் படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும், ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தெரிவித்தார்.