சென்னை வேளச்சேரியில் அம்மா திருமண மண்டபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரூ. 8.70 கோடியில் அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் திறக்கப்பட்டது. ஆனால் நிா்வாக காரணங்களால், திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதன் விளைவாக அந்த திருமண மண்டபம் சமூக விரோதக் கும்பலின் கூடாரமாக இருப்பதாக புகாா் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அண்மையில் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் அம்மா திருமண மண்டபத்தை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 8 ஏசி இயந்திரங்கள், மின் விளக்குகள், மின்சாதன பொருள்கள், மோட்டாா்கள் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளா் தமிழ்செல்வி இரு நாள்களுக்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.