வடகிழக்கு பருவமழை அக்டோபா் 4- ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வோா் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் மாதத்தில் நிறைவடைகிறது. இதன்படி தற்போது தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போதைய கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில் நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபா் 4-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.