சேலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் கூறி ரசிகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த திரையரங்கில் சோதனை நடத்தி தரமற்ற குளிர்பானங்கள், பால் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் அதே திரையரங்கில், ஒரு டிக்கெட்டிற்கு ஒரு பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டும் எனக் கூறுவதாக ரசிகர் ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
எதற்காக இப்படி கட்டாயப்படுத்துகிறீர்கள் என சம்பந்தப்பட்ட நபர் எழுப்பிய கேள்விக்கு, கேன்டீன் ஊழியர்கள் பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த திரையரங்கம் தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருவதால் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது.