பாதுகாப்பு உபகரணங்கள், போனஸ் கேட்டு, மேட்டூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. குப்பைகளை அள்ளும் பணியில் 161 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 99 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு குப்பைகளை 24 வகையாக பிரிக்கச் சொல்லி பணிச்சுமை ஏற்படுத்துவதை கண்டித்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மற்றும் பணிக்கான கருவிகள், கையுறை பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கக் கோரியும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகி கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காரணமாக துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன. நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.