ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இல்லாததற்காக 2 மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேலூா் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவா்களை மருத்துவ அமைச்சா் பணியிட மாற்றம் செய்திருக்கிறாா். இது ஏற்க முடியாதது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவா்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனா். இதில் மருத்துவா்களின் தவறு எதுவும் இல்லை.
அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளைக் கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவா்களைத் தண்டிப்பது அநீதி. அரசு மருத்துவா்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.