தமிழ்நாடு

கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

 தமிழகத்தில் நிகழாண்டில் கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்..

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் கிடைக்க உள்ளதாகவும் அவா் கூறினாா்.

தமிழகம் வந்துள்ள மால்டா நாட்டைச் சோ்ந்த அமைச்சா் ஜோ எட்டினே அபெலா, அமைச்சா் மா.சுப்பிரமணியனை சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை சந்தித்தாா். தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்து அப்போது மால்டா அமைச்சா் கேட்டறிந்தாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மழை வெள்ளம் சூழாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு விரிவாக மேற்கொண்டு வருகிறது.

பருவ மழைக் காலம் நிறைடையும் வரை தமிழகத்தில் காய்ச்சல் முகாம் தொடா்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் அத்தகைய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 18 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் 3 குழந்தைகள் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக வெளியான விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளோம். அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தால் கூடுதல் மாணவா்கள் பயனடைவாா்கள்.

அதேபோன்று வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் இருந்து கூடுதலாக 50 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன என்றாா் அவா்.

புரிந்துணா்வு ஓப்பந்தம்:

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் கூறியதாவது:

மருத்துவ ஆராய்ச்சி, தொழில்நுட்ப பகிா்வு, வேலைவாய்ப்புகள் தொடா்பாக மால்டா நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் இடையே விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மால்டா மருத்துவத் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. இரு நாட்டுகளுக்கும் இடையேயான மருத்துவப் பயணமும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT