தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்பு (எம்.எட்.) சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் வியாழக்கிழமை (அக்.6) முதல் தொடங்கவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கான (பி.எட்) விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த செப். 24-ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான (எம்.எட்) மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் அக்.6}ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் அக். 12 வரை www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
அதன் தொடர்ச்சியாக தரவரிசைப் பட்டியல் அக். 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.18 முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.