நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசிவிஸ்வநாத சண்முகம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான காசிவிஸ்வநாத சண்முகம் வியாழக்கிழமை காலை தமிழகம் வந்தார். சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினத்திற்கு வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர் நாகை ஆயுதப்படை மைதானத்தில் தரை இறக்கப்பட்டது.
அங்கு, நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் காசிவிஸ்வநாத சண்முகத்தை வரவேற்றனர்.
இதையும் படிக்க | ‘இஞ்சி’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?
பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர், நாகை மாவட்டம் சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு மேற்கொண்ட அவர், அருள்மிகு சிங்காரவேலவர் சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பின்னர், மீண்டும் நாகை ஆயுதப்படை மைதானத்துக்கு வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.