மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் புதன்கிழமை அதிகாலை(அக்.5) சென்னை விமான நிலையம் வந்தனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு தொடர் முயற்சியால் அவர்கள் மீட்கப்பட்டனர்.
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், மியான்மரில் சிக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழகர்கள் புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தனர்.
அவர்களை சிறுபான்யினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய தமிழர்: மீட்புப் பணி தீவிரம்
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள் முதலாவதாக மியாவாடி பகுதியில் இருந்து 32 இந்தியர்களை மீட்டனர்.
டிஜிட்டல் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடிகளில் ஈடுபட்டுள்ள சில மோசடி ஐடி நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் வேறு சில மாநிலங்களில் இருந்து முகவர்களை பயன்படுத்தி இந்திய நாட்டினரை 'ஆட்சேர்ப்பு' செய்தது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "தாய்லாந்தில் அதிக லாபம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகள் குறித்த சமூக ஊடக விளம்பரங்களால் தொழிலாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த தொழிலாளர்கள் பின்னர் சட்டவிரோதமாக மியான்மரின் மியாவாடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், இந்த பகுதி யாரும் அணுகுவதற்கு கடினமானது எனத் தெரிவித்திருந்தது".