பென்னாகரம்: விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாப்பாரப்பட்டியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒண்ணப்ப கவுண்டன அள்ளி ஊராட்சியில் தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மண்டபம் வளாகத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 139 பிறந்தநாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கலந்துகொண்டு, தியாகி சுப்பிரமணிய சிவா மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்தும், வளாகத்தில் உள்ள நூலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார், சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்கள் கே.பி. அன்பழகன் (பாலக்கோடு) ஜி.கே.மணி ( பென்னாகரம்), எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ( தருமபுரி), சம்பத்குமார் ( அருர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா, தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ.தடங்கம் பெ. சுப்பிரமணி, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் டி.ஆர். அன்பழகன், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அண்ணாதுரை செய்திருந்தார்.