திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆறு பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இவர்களில் இதுவரை 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து பூண்டிமாதா கோயிலுக்கு ஆன்மீகப் பயணமாக பேருந்து மூலம் வந்த 52 பேரில் 6 பேர் திங்கள் கிழமை (அக்டோபர் 3) காலை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள். 4 பேர் இறந்த நிலையில் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 52 பேர் ஆன்மீக சுற்றுலாவாக பூண்டி மாதா கோயில், வேளாங்கண்ணி செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி திங்கள் கிழமை காலை பூண்டிமாதா கோவிலுக்கு வந்தனர்.
இதில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியவர்களில் 6 பேர் எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி மாயமானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடியதில் தூத்துக்குடி சிலுவைபட்டி கோவில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ் (38), பிருத்திவிராஜ் ( 35 ) ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள நான்கு பேரை தேடும் பணி நடந்து வந்தது.
இதில் துரைராஜின் மற்றொரு மகனான தாவீத்(30) மதியம் 2.30 மணியளவில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பிரவி ராஜ் (19) 3.30 மணியளவில் மீட்கப்பட்டார். ஈசாக் (19) ஹெர்மெஸ் (19), ஆகியோரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. தேடும் பணியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் படகில் சென்று தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.