செய்யாறு: செய்யாறு அருகே தனியார் கம்பெனி பேருந்து மோதியதில் ஆடு வியாபாரிகள் 2 பேர் இறந்தனர். இந்த பரிதாப சம்பவம் திங்கட்கிழமை நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பப் பிள்ளை (75), இவரது நண்பர் உத்திரமேரூர் வட்டம் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42). இவர்கள் இருவரும் ஆடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வியாபார விஷயமாக திங்கள்கிழமை காலை காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் நெடுங்கல் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது சுங்குவார்சத்திரத்தில் இருந்து பொன்னூர் நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பெனி பேருந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.
இதில் எல்லப்பப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து இறந்த எல்லப்பப் பிள்ளையின் மகன் மச்சேந்திரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரான வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.