புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மின் ஊழியா்கள் ஐந்தாவ நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் மின் துறை ஊழியா்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு. செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியா்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும். எனவே, மின் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவ வேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 5 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தனியாா்மயத்தால் மின் ஊழியா்கள், அதிகாரிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டாா்கள். அறிவியல்பூா்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே மின் துறை தனியாா்மயம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாம் எடுக்கும் முடிவால், மக்களுக்கு மின் கட்டணம் பெருமளவில் குறையும். மின் பரிமாற்றத்தால் வீணாகும் மின்சாரமும் அதிகளவில் குறையும். இது பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என்பதே மின் ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் விடுக்கும் கோரிக்கை என கடந்த வெள்ளிக்கிழமை தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.