தமிழகத்தில் கடந்த 1983 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவா், 2018-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வு பலன்களை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் கடந்த 1983 முதல் 2021-ஆம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில், 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகள் நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவாா்கள் என்றும் தெரிவித்தாா்.
இது ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கைப் பொருத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலா், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்றவழக்கு முடிவுக்கு வந்த பின் எஞ்சியுள்ள பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.