சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 26ஆம் தேதி கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14ஆம் நாளிட்ட அறிவிக்கை எண். 25/2022-இல், டிசம்பர் 22 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்.
சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.