விழுப்புரம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் அதிமுகவினர் கொடிக்கம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் திமுக இளைஞரணிச் செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடந்த 26 ஆம் தேதி கொடிக்கம்பத்துடன் கூடிய கல்வெட்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் அருகிலேயே அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டு நினைவுக் கல்வெட்டு அமைக்க செவ்வாய்க்கிழமை காலை அதிமுகவினர் பகுதியில் கூடினர். தொடர்ந்து அப்பகுதியில் கல்வெட்டு அமைக்க மண் தோண்டும் பணியை மேற்கொண்டனர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினர் அங்கு வந்து பணியை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறினர்.
திமுகவினர் கொடிக்கம்பம் அமைத்திருக்கும்போது நாங்கள் ஏன் அமைக்கக்கூடாது எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். கோட்டாட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டபிறகு பணிகளை மேற்கொள்ளலாம் என காவல்துறையினர் கூறினர்.
இதையும் படிக்க: பிரபாஸ் காதலில் விழுந்த ஹிந்தி நடிகை!
இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அதிமுக நகரச் செயலர்கள் ராமதாஸ், பசுபதி மற்றும் அதிமுகவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.