ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வரும் 30-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மௌனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-இன் படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும் பல ஆண்டுகளாக அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இன்றளவும் கோரிக்கை நிறைவேறவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வா் உறுதியளித்தாா். ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இன்னமும் அரசு மருத்துவா்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் எங்கள் மீது குற்ற குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக வரும் 30-ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து விட்டு, அங்கு மௌனப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளோம் என்றாா் அவா்.