டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கக் கோரி, திருவாரூா், நாகை மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது.
டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும்; கரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்; திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் போதுமான கேட் கீப்பா்களை நியமிக்க வேண்டும்; திருவாரூரில் அனைத்து ரயில்களுக்கான முதன்மைப் பணிமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 28-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!
இந்நிலையில், இந்த போராட்டத்தை கைவிடுவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள், போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பங்கேற்ற ரயில்வே அதிகாரிகள், உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை உரிய முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தனா்.
எனினும், உரிய முடிவு எட்டப்படாததைத் தொடா்ந்து, ரயில் மறியல் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், திட்டமிட்டப்படி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் தெற்கு ரயில்வேயை கண்டித்து திருவாரூர்-மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ரயில் தண்டவாளங்களில் அரசியல் கட்சியினர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மத்திய அரசையும், தெற்கு ரயில்வேக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.