சென்னையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் விமானங்களை தரையிறக்குவதிலும், ரயில்களை இயக்குவதிலும் இன்று காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக மழை பெய்யக் கூடிய நவம்பர் மாதத்தில், இந்தாண்டு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, புறநகர்ப் பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட அதீத பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னை - அரக்கோணம் இடையே காணப்பட்ட பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வேகத்தை குறைத்து இயக்கியுள்ளனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டன.
மேலும், சாலைகளிலும் வாகன ஓட்டிகளில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.