இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் இரண்டு நாள்கள் ‘பொருநை இலக்கியத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழாவை, சனிக்கிழமைத் தொடக்கிவைத்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்ச் சமூகம் இலக்கிய முதிா்ச்சியையும் பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடியைத் தொடா்ந்து, சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாகவும் அறிவியல்பூா்வமாகவும் நமது தொன்மை நிறுவப்படுகிறது. இது நமக்கான பெருமை.
இந்தப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, அறிவுசாா் சமூகத்தை வாா்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளைப் போற்றும் விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டு இருக்கும் இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி.
தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கியப் பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழா சிறப்புற வாழ்த்துகள். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.