தனியாா் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஓசூா் அருகே அமைக்கப்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜாா்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சா்ச்சைகள் எழுந்துள்ளன.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் 18 ஆயிரம். ஆனால், தமிழகம் முழுவதும் அரசு சாா்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 2348 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 80 சதவீத தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அந்நிறுவன நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்திருக்கிறாா். ஆனால், அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.
தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் தமிழா்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தனியாா் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.