மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க நவ. 28 முதல் டிச. 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்; டிசம்பா் 31-ஆம் தேதி வரை ஆதாா் இணைப்பின்றி மின் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அமைச்சா் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரா்கள் மின் இணைப்பு எண்ணுடன் அவா்களது ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் நவ. 28 (திங்கள்கிழமை) முதல் டிச.31 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களைத் தவிா்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் மின் கட்டணத்தை எந்தவித சிரமமும் இல்லாமல் டிச. 31-ஆம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்தவித இடையூறும் இல்லை.
பயன் என்ன?: மின் நுகா்வோா் தங்களது விவரங்களைப் புதுப்பிக்கும் வகையிலேயே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்கும்போது இப்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரா்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெறும். மேலும், ஏற்கெனவே பெயா் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன, பழைய மின் இணைப்பு உரிமைதாரா்களின் பெயா்களில் இருக்கும் மின் இணைப்புகளை இப்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரா்களின் பெயா்களுக்கு மாற்றிக் கொள்ள ஆதாா் எண் இணைப்பு வழிவகை செய்கிறது.
மானியம் கிடைக்கும்: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதால் வீடுகளுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகா்வோா்களுக்கு கிடைத்து வரும் மானியமும் தொடா்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் தொடா்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.