சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தில்லி செல்கிறார்.
இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் உலகின் 20 முன்னணி பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் ஜி-20 அமைப்பின் தலைவராக பிரதமர் நரேமந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அவர் வரும் 1 ஆம் தேதி முதல் இந்த பொறுப்பை ஏற்று செயல்படுகிறார்.
இதையும் படிக்க | ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?
ஜி-20 அமைப்பு சம்மந்தமாக விளக்குவதற்காகவும், மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக மாநில முதல்வர்கள் கூட்டத்தை தில்லியில் 5 ஆம் தேதி கூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் 4 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார்.
பின்னர், அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மோடியிடம் ஸ்டாலின் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, இந்த மாநாட்டில் கலந்துகொள்ள போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.