திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருநின்றவூரில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாகக் கூறி, பள்ளி தாளாளரின் மகன் வினோத் (34) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டம், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பட்டாபிராம் சரக காவல் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், மாவட்டக் கல்வி அலுவலர் (மெட்ரிகுலேசன்) ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையும் படிக்க | மின் கட்டணம் செலுத்த ஆதாா் இணைப்பு கட்டாயமில்லை
7 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சின் முடிவில் வினோத் மீது நடவடிக்கை எடுக்க திருநின்றவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தலைமறைவான வினோத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவை அடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வினோத்.