புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த தவறினால் நானே களமிறங்கி போராடுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், புதுச்சேரி அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாமக அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.
இதையும் படிக்க | பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.
பாமக சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுச்சேரி அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.