பல நூற்றாண்டுகளுக்கு பின் ஜூன் 3-ம் தேதி மதுரை புது மண்டபத்தில் வசந்த விழா நடைபெற உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த 2018ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபம் இருந்து அரிய சிற்பங்கள் தீயால் கடுமையாக சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புது மண்டபத்திலும் அரிய சிற்பங்கள், கல் தூண்கள் உள்ளதால் அங்குள்ள கடைகளை மாநகராட்சியின் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து, கடந்த ஆண்டு குன்னத்தூர் சத்திர கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், புது மண்டபத்தில் இருந்த 300 கடைகளை இடமாற்றம் செய்வதாகவும், ஏல முறையில் சுமார் 268க்கும் மேற்பட்ட கடைகள் சத்திரத்திற்கும் மாற்றப்பட்டன.
இந்த நிலையில் ஏலம் எடுக்கும் 33 கடைகள் மற்றும் புதுமண்டபத்தை விட்டு இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருகிற ஜூன் 3-ம் தேதி வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக புது மண்டபத்தைச் சுற்றி கடைகள் உள்ள பகுதியில் தண்ணீர் நிரப்ப படிக்கட்டுகளை உடைக்கும் பணி நடைபெற்றது. இதில் 22 கடைக்காரர்கள் மட்டும் கடைகளை காலி செய்ய மறுத்தனர்.
கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கடைக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் செல்ல தடையாக உள்ள இடத்தை மட்டும் கோயில் பணியாளர்கள் காவல்துறையினர் உதவியுடன் இடித்தனர்.
கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தைத் தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்ற அமைப்பு உள்ளதை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.