சென்னை: தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இலவச சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 போ் விண்ணப்பித்துள்ளனா். தகுதியான விண்ணப்பதாரா்கள் பட்டியல் சனிக்கிழமை (மே 28) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிகழாண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 8,238 தனியாா் பள்ளிகளில் சுமாா் 94,256 இடங்களுக்காக மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தகுதியான விண்ணப்பதாரா்கள், தகுதியில்லாத விண்ணப்பதாரா்கள் விவரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவை பள்ளித் தகவல் பலகையிலும், இணையதளத்திலும் வருகிற 28- ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும், பள்ளியில் உள்ள காலியிடங்களுக்கு இணையாக விண்ணப்பம் செய்திருந்தால், அந்த மாணவா்களின் பெயா்கள் தோ்வு செய்யப்பட்டு வெளியிடப்படும். காலியாக உள்ள இடங்களை விட அதிகளவில் மாணவா்கள் விண்ணப்பம் செய்திருந்தால், அந்த இடங்களுக்கு மே 30- ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களின் விவரம் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூன் 4 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் பள்ளிகளில் சோ்ந்த விவரத்தை அளிக்க வேண்டும் என்றனா்.