அரக்கோணம்: அரக்கோணம் அருகே வியாழக்கிழமை நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தடுத்து நிறுத்தினார்.
அரக்கோணத்தை அடுத்த ஊராட்சி அவிநாசி கண்டிகை கிராமத்தை சேர்ந்த மகன் பிரகாஷ் (21). திருவள்ளுர் மாவட்டம், வேப்பம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாபுவின் மகள் பவானி (13). இவர் அரக்கோணத்தை அடுத்த வட மாம்பாக்கம் ஊராட்சி சாய்பாபா நகரில் உள்ள தனது தாய் மாமா சிவகுமார் வீட்டில் தங்கி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
வியாழக்கிழமை பவானிக்கும் பிரகாஷுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் சிவகுமார் வீட்டில் நடைபெற இருந்ததாம்.
இதை சைல்ட் லைன் மூலம் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாண்டியன் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கும் முன்னரே அரக்கோணத்தில் உள்ள சிவகுமார் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து மணப்பெண், மணமகன் இருவரையும் அழைத்து அறிவுரை கூறிய ஆட்சியர், தொடர்ந்து மணமகள், மணமகன் இருவரது குடும்பத்தாரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்து இரு குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 20 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில், தற்போது நடைபெற இருந்த திருமணத்தில் தான் பெண்ணின் வயது குறைவு. அரக்கோணம் பகுதியில் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளிகள் திறந்ததும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கூறினார்.
அப்போது, ஆட்சியருடன் கோட்டாட்சியர் சிவதாஸ், வட்டாட்சியர் பழனி ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.