சென்னை: காவிரி டெல்டா பகுதியில் தூா்வாரும் பணிகள் மே 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூா்வாரும் பணிகள் ஏப்ரல் 23-இல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்துக்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஆறுகள் தூா்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது.
கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூா்வாரும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்துக்கு போா்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களைப் பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீா் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் மே 31-க்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.