மானாமதுரை: கட்டிகுளம் கோயில் விழா ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை இளம் காளையர்கள் அடக்கிய காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு புதன்கிழமை கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் அணி அணியாக வந்து சீறிப்பாய்ந்த காளைகளை பிடித்தனர். ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
காளைகளை பிடிக்க முயன்று 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், ஸ்டவ் அடுப்பு, சில்வர் அண்டா, வாளி, சேர், ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் சிறப்பாக நின்று களமாடிய காளைகளுக்கும், அதன் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி காளையர்களுக்கும் கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதையும் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம்: மாம்பழம் உண்ட மயக்கத்தை ‘மாவிலை’ தீர்க்குமா..?