கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14 ஆயிரத்து 777 ஏக்கர் நன்செய் பாசன நிலங்களில் இரண்டு போக சாகுபடி நடைபெறுகிறது. முதல்போக சாகுபடிக்கு ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஜூன் 1 -ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் போதுமான அளவில் தண்ணீர் உள்ளதால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முதல் போக சாகுபடிக்கு ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தலைமதகு பராமரிப்புப் பணிகள்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் தலைமதகு குமுளி தேக்கடி சாலையில், தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அலுவலகம் அருகே உள்ளது.
பெரியாறு அணை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தண்ணீர் செல்லும் தமிழக கால்வாய் பகுதியில் சல்லடைகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, தண்ணீர் சீராக செல்வதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறையினர் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி முதல் போக சாகுபடிக்கு வரும் ஜூன் 1 அல்லது 2 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, நீர் மட்டம் 131.80 அணியாகவும், மொத்த 142 அடி உயரம்), நீர் இருப்பு, 5118 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு, 371 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது.