தஞ்சாவூர்: தஞ்சாவூர் கருணாசுவாமி கோயில் நடைபெற்றுவரும் குளம் புணரமைக்கும் பணியில் சுடுமண்ணாலான சோழர் காலத்து ஏழு உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கரந்தை பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான, பெரிய கோயிலுக்கு முன்பே உருவான கருணாசுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. இந்த தீர்த்த குளம் தஞ்சை ஆண்ட கல்லணையை கட்டிய மாமன்னன் கரிகால் சோழன் இந்த குளத்தில் குளித்து தனக்கு உள்ள தோல் நோயைப் போக்கிக் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.
இந்த குளம் மற்றும் இந்த குளத்திற்கு வரக்கூடிய நீர் வழிப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில், சிவனடியார்கள் இந்த குளத்தை மீட்டு, நீர் வழிப்பாதையை கண்டறிந்து. தஞ்சை வடவாறு ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு குளத்திற்கு தண்ணீர் வந்து குளம் நிரம்பியது.
இந்நிலையில், தற்போது ரூ.2 கோடி செலவில் குளம் புணரமைக்கும் பணி கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது.
அப்போது குளத்தை தூர்வாரும் போது பழமையான 3 அடி விட்ட சுடுமண்ணாலான உறைகிணறு ஏழு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குளத்தை முழுமையாக தூர் வாரினால் நூற்றுக்கும் மேற்பட்ட சுடுமண்ணாலான கிணறுகள் மற்றும் பழங்கால வரலாறு தெரியவரும் என கூறுகின்றனர் சிவனடியார்கள்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்