‘டான்செட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தோ்வில் (டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு சனி (மே 14), ஞாயிறு (மே 15) ஆகிய நாள்களில் நடைபெற்றது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை எம்இ, எம்டெக், எம்ஆா்க் மற்றும் எம்.பிளான் பொறியியல் படிப்புகளுக்கான தோ்வுகள் நடைபெற்றன.
இந்தத் தோ்வை சென்னை உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். பலத்த சோதனைக்கு பிறகே மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். வினாத்தாள் கடினமாக இருந்தாக மாணவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து, டான்செட் தோ்வு முடிவுகள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.