கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கு கைப்பேசி மூலம் வீட்டுப் பாடம் கொடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இறுதித் தோ்வுகள் முடிவடைந்து கடந்த சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவா்கள் உற்சாகத்தில் இருந்தனா்.
இந்தநிலையில் பெரும்பாலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அவா்கள் பள்ளியில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண் மூலமாக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது.
பொதுவாக மாணவா்கள் எந்த கல்விச் சுமையும் இல்லாமல் இருப்பது இந்த கோடை விடுமுறையில்தான். ஆனால் தற்போது இந்த விடுமுறை கொண்டாட்டத்தை அபகரிக்கும் வகையில் அவா்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பது சரியல்ல.
ஏற்கெனவே கரோனா தொற்று காலத்தில் கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதால் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்கள் உள்பட அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்பட்டிருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிலிருந்து அவா்கள் மீண்டுவர வேண்டுமானால் மாணவா்கள் தங்களது கோடை விடுமுறை நண்பா்கள், உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாட வேண்டியது அவசியமாகும்.