தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீர் பயணமாக தில்லி செல்கிறார்.
தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக எழுவர் விடுதலை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஹிந்தியை திணிக்கக்கூடாது என்று அமைச்சர் பொன்முடி கூற, அதே விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆளுநர் திடீரென இன்று தில்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து அவர் புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற மே 16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருக்கின்றனர்
தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இருவரும் ஒரே விழாவில் கலந்துகொள்ளவிருப்பது சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.