நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பலத்த சூறைக்காற்றினால் அறுவடை செய்யத் தயாராக இருந்த ஒரு லட்சம் வாழைகள் சேதமடைந்தன.
ராதாபுரம் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து வீசி வந்த சூறைக்காற்றினால் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கண்டிகைபேரி, கேசவநேரி, ஆனைகுளம், புதூர் ஆகிய பகுதிகளில் குலை தள்ளிய நிலையில் அறுவடை செய்யத் தயாராக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.