சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி ஆணை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள 14 ஊராட்சிகளுக்கும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ.3.50 கோடிக்கான பணி ஆணை வழங்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் முடங்கின. மேலும், இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தனர்.
கொளத்தூர் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் பணி ஆணை வழங்கக் கோரி முறையிட்டும் எந்த பயனும் இல்லை என ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே முருகனும் பணியிட மாறுதலில் சென்றுவிட்டார்.
இதையடுத்து பணிகளுக்கான ஆணையை உடனடியாக வழங்கக் கோரி இன்று பிற்பகலில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் 11 பேர், கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு பணி ஆணை வழங்கும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர்களின் போராட்டம் காரணமாக கொளத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.