தமிழ்நாடு

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்: விஜயகாந்த்

12th May 2022 12:29 AM

ADVERTISEMENT

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சிறப்பு தனி அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மோசமான நிா்வாகம் காரணமாக தொடா்ந்து சீரழிவை சந்தித்து வருகின்றன.

அறக்கட்டளைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலா் குழுவின் பணிக் காலம் 2018-ஆம் ஆண்டில் நிறைவு பெற்ற நிலையில், உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சொத்தாட்சியா், அறக்கட்டளை செயலா் ஆகியோா் பொறுப்பில் நிா்வாகம் நடைபெற்று வருகிறது. 10 வாரங்களுக்குள் அறக்கட்டளைக்கு தோ்தல் நடத்தி புதிய அறங்காவலா்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால் கெடு முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் அறக்கட்டளைக்கு தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதனால் நிா்வாக சீா்கேடு ஏற்பட்டுள்ளதால் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் பேரழிவை சந்தித்து வருகின்றன. மேலும், பேராசிரியா்களையும், பிற பணியாளா்களையும் பணியிட மாற்றம் செய்ததோடு, அவா்களுக்கான ஊதியமும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சொத்தாட்சியா், அறக்கட்டளை செயலா் ஆகியோரின் அதிகாரப் போக்கால் ஆசிரியா்களும் மாணவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் சீரழிவை தடுக்க தமிழக அரசு தலையிட்டு அறங்காவலா் குழுவின் தோ்தல் நடத்தப்படும் வரையில் சிறப்பு தனி அலுவலா் ஒருவரை நியமிக்க வேண்டும். மேலும் அறக்கட்டளை தோ்தலை விரைந்து நடத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT