விபத்தில் காயமடைந்தவா்களுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அலட்சியம் காட்டியதற்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மநீம சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதியினருக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. ரத்தத்தைக் கழுவிவிட்டு வந்தால்தான் சிகிச்சையளிக்கப்படும் என்று சொல்வது மருத்துவ அவசர சிகிச்சை முறைகளுக்கு மட்டுமல்ல மனிதநேயத்துக்கு முரணானது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருந்தாலும் இதுபோன்ற செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு அரசு மருத்துவமனையை நாடி வரும் சாமானிய மக்களுக்கு முறையான சிகிச்சை, விரைவாக வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.