தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சமுத்தரம் பகுதியைச் சார்ந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். சில ஆண்டுகளுக்கு முன் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே சில தடையங்களை அழித்ததாக கனகராஜின் மூத்த அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு, தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிபந்தனை ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில், சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் உள்ள கனகராஜ் மனைவி கலைவாணி (28) சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், சொத்து விற்பனை தொடர்பாக ஜலகண்டாபுரம் வந்தபோது, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் (44) தனபால் மீது நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இதுவரை வழக்கிற்கு ரூ. 4 லட்சம் செல்வாகி உள்ளது. அந்த பணத்தை கொடுக்கு வேண்டும் என்று மிரட்டியதோடு, அங்கிருந்து தான் தப்ப முயன்ற போது துணியை இழுத்து அசிங்க படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்கா: மூடிய லாரியில் 46 அகதிகளின் சடலங்கள்
கடந்த 3 ஆம் தேதி இச்சம்பவம் நடந்திருந்தாலும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசார், பழனிவேலை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர். மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பழனிவேல் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.