தமிழ்நாடு

குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்? பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

DIN

சென்னை: குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் பிறந்த நொடியிலிருந்து இறுதிநொடி வரை கற்றுக்கொண்டே இருக்கிறோம். நமது உலகைப் பற்றியும் சுற்றுச்சூழலைப் பற்றியும் நமது புலன்கள் வாயிலாகவே அறிந்துகொள்கிறோம். குழந்தைகளும் சிறுவர்களும் தங்கள் புலன்கள் வாயிலாகவேஉலகைப் புரிந்துகொள்கிறார்கள்.

இதிலிருந்தே அவர்களின் கற்றல் பயணம் தொடங்குகிறது. அழுதால் உணவு கிடைக்கும், உதவி செய்தால் கைதட்டல் என்ற பாராட்டு கிடைக்கும் என தனது ஒவ்வொரு செயலுக்கும் பெறக்கூடிய எதிர்வினைகளில் இருந்து குழந்தை கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு புரியவைக்கவென்று ஒரு மொழி இருக்கிறது. அது மிக மிக எளிமையானது. இந்த எளிமை கைவரவில்லை எனில் குழந்தைக்கு நாம் சொல்வது புரியாமல் போய்விடும்.

ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இயல்பிலேயே ஆர்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் கற்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. சரியான, தகுந்த கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தினால் போதும். எனவே குழந்தைகளுக்குள் ஆர்வம் என்னும் தீயைத் தூண்டிவிடுவதே நம் வேலையாக அமைய வேண்டும். கேள்வி கேட்பதற்கும் ஆராய்ந்து பார்ப்பதற்கும் வாய்ப்பையும் சூழலையும் வழங்க வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் கற்றுக்கொள்ளும் முறை மாறுபடுகிறது. அதற்கேற்ப கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும்.

குழந்தைகள், தங்களைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியும் பெரியவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே செய்வதன்மூலமும் கற்றுக்கொள்கிறார்கள். முதல் சில ஆண்டுகளில் தன்னைச் சுற்றி உள்ளவற்றை, நடப்பவற்றை உற்று நோக்குவதன் வாயிலாகவே குழந்தை கற்றுக்கொள்கிறது.

இயல்பாகவே குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் எதையாவது செய்து கொண்டும் இருப்பவர்கள். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை, மணிக்கணக்கில் ஒரு மேசையில் அமர்ந்து ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல. இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு குழந்தையும் செய்து பார்த்து உணர்ந்து கற்பதற்கு ஏற்றவகையில் வகுப்பறை செயல்பாடுகளால் நிறைந்திருக்க வேண்டும்.

0-8 என்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கான முக்கியமான காலக்கட்டம். இக்காலக்கட்டத்தில் குழந்தைகள், விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். மற்ற பருவங்களைவிட இப்பருவத்தில் அவர்களின் உள்வாங்கும் தன்மை சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு அல்லது செயல்பாடுகளே கற்றுக்கொள்ள உதவும். இதனடிப்படையில் கற்பித்தல் முறை அமையவேண்டும்.

குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த நாள்முதல் ஏழு ஆண்டுகள் வரை குழந்தைகள் உணர்ந்து அனுபவித்து அறியும் அனுபவ கற்றல் நடைபெறுகிறது. பாடல்கள், கதைகள், களப்பயணங்கள், கலைகள், கவிதைகள், உடலியக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவகத்தில் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக் கொள்கிறது. ஒரு குழந்தை கேட்பதாலும், வேறொரு குழந்தை பார்ப்பதாலும் இன்னொரு குழந்தை தொட்டுணர்வதாலும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். எனவே கற்பித்தலும் இப்படி அனைத்து விதத்திலும் இருக்கவேண்டிய தேவையுள்ளது.

சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, அனுபவங்களின்வழி கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சிறப்பான கற்றல் திறனுடையவர்களாக ஆகிறார்கள். இதற்கேற்ப விளையாட்டுவழி, செயல்வழி, தொட்டுணர், செயல்பாடுக கள், பாடங்கள் கற்றுத் தரப்பட வேண்டும். நீங்கள் கற்பிக்கும் முறை வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் கற்பிக்க வேண்டும் என்றார் இக்னேசியா எக்ஸ்ட்ரடா - இதனடிப்படையிலேயே கற்பித்தல் நிகழவேண்டும்.

மன அழுத்தமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைக்கு எளிதில் பாடங்கள் புரியும். நமது கல்விமுறை முழுமையும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். அதாவது, போட்டியின் அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், அனுபவித்துக் கற்றுக்கொள்வதாக மாற வேண்டும். கற்றுக்கொண்டவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில் கல்வியின் குறிக்கோள் அமையவேண்டும். எனவே, குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை, ஆற்றலை உணரும் வகையில் பேசுதல், செயல்பாடுகள், கலை, கைவினைச் செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், கதை, வாசித்தல், பொம்மலாட்டம், படைப்பு மற்றும் பல செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கற்பித்தல் முறை தேவையாய் இருக்கிறது.

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021இல் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022ஆம் ஆண்டிற்குள் நுழைகிறது. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வருகையில் இந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை பள்ளி வகுப்பறையில் செய்ய வேண்டி இருக்கிறது. இணையவழி வகுப்புகள் நடந்திருந்தாலும், இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தன. போலவே, ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு. அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம்.

இந்தத் தேவையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டில் 1-3 வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.

வரும் 2022-23 கல்வியாண்டில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பது. அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். செயல்வழியிலும் விளையாட்டுவழியிலும் குழந்தைகள் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை. குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கவும் ‘எண்ணும் எழுத்தும்’ உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்.

1. “கற்றல் என்பது அனுபவம். மற்றவை அனைத்தும் வெறும் தகவல்களே” 
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
2. ஆப்பிள்கள் கீழே விழுவதைக் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருந்தனர். ஆனால் நியூட்டன் மட்டுமே அதைக்கண்டு கேள்வி எழுப்பினார்” -
பெர்னார்ட் பாரூச்.
என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT